கசக்கும் உண்மைகளும், சில நகைச்சுவைகளும் : நெல்லைக்கண்ணன் All tamilars must read it.

00:24 Edit This 0 Comments »

உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல், காந்தியின் பாதுகாப்பிற்காக ராணுவத்தை அனுப்பி வைத்தார். காந்தியை தொடர்ந்து கலெக்டரும், ராணுவமும் போகின்றனர். கலெக்டரிடம் காந்தியடிகள் கேட்கிறார், "எதற்காக ராணுவம்?' கலெக்டரும், "உங்கள் பாதுகாப்பிற்காக' என்கிறார். "என் நாட்டு மக்களிடம் போகிறேன். அதற்கு எனக்கு பாதுகாப்பா? உடனடியாக ராணுவத்தை திருப்பி அனுப்புங்கள்' என்று அங்கேயே நின்று விட்டார். ராணுவம் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு தான் காந்தியடிகள் நவகாளிக்குள் சென்றார். 
திருநெல்வேலியில் பொதுக்கூட்டம் பேச, ஈ.வெ.ரா., வருகிறார். வயது 93. ஒரு குறிப்பிட்ட இனத்தவரை ஏதோ தவறுதலாக சொல்லி விட்டார் என்று, மதுரையில் அவரது கூட்டத்தில் தகராறு. ஆகவே, திருநெல்வேலியில் ஆபத்து ஏற்படும் என கருதிய முதல்வர் கருணாநிதி அரசு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது.
ஏராளமான காவலர்கள், அதிகாரிகள், ஈ.வெ.ரா., பேசுகிற இடத்திற்கு பின்னால் இருந்த ஓர் அரண்மனையில், நீதிபதியே வந்து அமர்ந்திருந்தார். துப்பாக்கிச் சூடு உத்தரவு தருவதற்காக. அந்த சிங்கம் மேடைக்கு வந்தவுடன், "எல்லா போலீஸ்காரங்களும் உடனே போயிருங்க. நீதிபதி அய்யா அவர்களையும் நான் கேட்டுக்கறேன்.
நீங்களும் போயிருங்க. யாருக்காக பாடுபடறேனோ, அவங்களே என்னை கொல்லப் போறாங்கன்னா கொல்லட்டும்' என்றார். பாதுகாப்பிற்காக வந்த அத்தனை காவலர் படையும் போன பின்னர், நீதிபதியும் போன பின்னரே ஈ.வெ.ரா., பேசினார்.
காமராஜர் முதல்வராகி வெளியில் கிளம்புகிறார். அவருக்கு முன், காவல் அதிகாரிகள் ஒரு காரில் சங்கு ஒலிக்க கிளம்புகின்றனர். காமராஜர், தனது உதவியாளரை விட்டு, அவர்களை கூப்பிட்டார். "எதுக்கு சங்குன்னேன்? நான் உயிரோடு தானே இருக்கேன்'.
"அய்யா பாதுகாப்பிற்காக' என்று பதில் தருகின்றனர். "அவங்க தானே என்னை முதல்வராக்கி இருக்கின்றனர். அவங்க மத்தியிலேயே இந்த பந்தாவெல்லாம் வேண்டாம். போங்க போங்க... வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க' என்றார்.
இன்று மத்திய அமைச்சர் அழகிரி வீட்டின் பாதுகாப்பு தேர்தல் கமிஷனால் குறைக்கப்பட்டவுடன் அவர் கூறுகிறார். "எனக்கு ஏதேனும் ஆபத்து என்றால் தேர்தல் கமிஷன் தான் பொறுப்பு' என்கிறார். 
அப்படியென்றால், "200 இடங்களில் வெற்றி பெறுவோம்' என அதே அழகிரி சொல்வது எப்படி உண்மையாக இருக்க முடியும்? 200 இடங்களிலே வெற்றி என்றால், மக்கள் அவர்கள் பக்கம் தானே. பிறகு எதற்கு பாதுகாப்பு?
நகைச்சுவைகள்: திரைப்பட நடிகைகள், நடிகர்கள் தேர்தலில் பேசுகின்றனர். கற்பை கொச்சைப்படுத்தி ராமதாசாலும், திருமாவளவனாலும் கடுமையாக தமிழுணர்வோடு கண்டிக்கப்பட்டு, நீதிமன்றங்களிலும் நிறுத்தப்பட்ட குஷ்பு, தி.மு.க.,விற்கு ஓட்டளித்தால், நமக்கு அவரை போலவே குழந்தை பிறக்கும் என உத்தரவாதம் அளிக்கிறார். இன்றும், பா.ம.க., தலைவர் மணி போட்டியிடும் மேட்டூர் நீதிமன்றத்தில் குஷ்பு மீது, கற்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது.
"முதல்வர் கருணாநிதி பெரிய ராஜதந்திரி' என்று இளங்கோவன் சொல்கிறார். தேர்தலுக்கு முன், "தி.மு.க.,வோடு கூட்டணியே கூடாது' என்று, பெரிய அறிக்கைகளில் வாழ்ந்து கொண்டிருந்தாரே... அவரே தான்.
அதை விடச் சிறப்பு, அவர் தந்தை சம்பத் எம்.பி.,யாக தி.மு.க.,வினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரந்துபட்ட அரசியலை டில்லியில் பார்த்து, காங்கிரசில் இணைந்தவுடன், கருணாநிதி, "பார்லிமென்டின் பெரிய கட்டடத்தை பார்த்தவுடன் சம்பத் மயங்கி விட்டார்' என்று அறிக்கை விட்டார்.
சம்பத் அதற்கு பதில் சொன்னார், "எங்கள் மாவட்டத்திலேயே பெரிய அரண்மனையிலே பிறந்தவன் நான். கருணாநிதிக்கு தான் பெரிய கட்டடங்கள் வியப்பை தரும்' என்று. இளங்கோவன், தன் தாயாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், அதுவும் முடியாத சூழல். கருணாநிதியோ இளங்கோவனை, தன் மடியில் தவழ்ந்த குழந்தை என்று போற்றி விட்டார்.
இவை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய நகைச்சுவை, உள்துறை அமைச்சர் பொருளாதார மேதை சிதம்பரம், "தேர்தல் கமிஷன் திருமண வீட்டை வேறு வீடாக்கப் பார்க்கிறது' என்கிறார். மேற்கு வங்கத்தில் மம்தா சொல்லவில்லை. 
கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி தோழர்கள் சொல்லவில்லை. சகவாச தோஷம், பெரிய மேதையான அவரும் புலம்புகிறார். ராமதாசும் குற்றம் சாட்டுகிறார். பென்னாகரம் தேர்தலிலே, ஆளுங்கட்சியை குற்றம் சாட்டியவர். சிரிப்பாக தான் வருகிறது. திருமங்கலமும், திருச்செந்தூரும், பென்னாகரமும் தானே இத்தனைக்கும் காரணம்.

0 comments:

MGR

MGR songs...